Saturday, February 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_imgspot_imgspot_imgspot_img

Related Posts

மண்ணின் மைந்தன் எழுத்தாளர் மு. பொன்னம்பலம்

மு. பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகளும் பரிசுகளும்

மு. பொன்னம்பலம் எழுதிய “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது

நூல்கள்

அது (1968)

அகவெளிச் சமிக்ஞைகள் (1980)

விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)

பேரியல்பின் சிற்றொலிகள் (1990)

யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)

கடலும் கரையும் (1996)

காலி லீலை (1997)

நோயில் இருத்தல் (1999)

திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)

ஊஞ்சல் ஆடுவோம் (2001)

பொறியில் அகப்பட்ட தேசம் (2002)

சூத்திரர் வருகை

விசாரம்

திறனாய்வின் புதிய திசைகள் (2011)

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

(இந்தச் சொற்களில் படர்ந்திருக்கும் என் நினைப்புகளை சிதையுங்கள், தவறுகளை சுட்டிக் காட்டுங்கள் – காலம் சஞ்சிகையில் வந்த ஆக்கம் இங்கே மீண்டும் .) 

01
‘யாரோ தள்ளிவிட்டதுபோல இருக்கிறது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்’
பிரக்ஞையற்று எழுதவில்லை, எழுத்துச் சுயமற்றோ, யாரையும் சார்ந்து நின்றோ எழுதவில்லை. ஹெமிங்வேயின் கிழவன் விட்ட தூண்டிற் கயிற்றை
பெரிய மீன் இழுத்துச் செல்வதுபோல…………………………………………………………………….
எழுத்து இழுத்துச் செல்கிறது .
‘இருமை என்ற இந்தப் பிரபஞ்சச் சிறையின் சிலுவையில் அறையப்பட்ட சீவ ராசிகளுள் என்னைத் தேடாதீர் ‘ என்று கூறிய ஓர் எழுத்தாளனின் இலக்கிய முகத்தை என் எழுத்தால் துருவப் பார்க்கிறேன்/.
துருவிக் கொள்வதற்கு எழுத்து உகந்த ஒன்றுதானா? எண்களால் ஒரு சமன்பாட்டை செய்து பார்ப்பது போல எழுத்தால் செய்து பார்க்கலாமா ? எண்களால் ஒரு விடையைச் சொல்ல முடிகிறது .எழுத்தால் விடை சொல்லலாமா ? எழுத்து எப்போதாவது ஒழுங்கான விடை சொல்லி இருக்கிறதா ? சரி ஏன் எண்களால் ஒரு இலக்கியம் எழுத முடியவில்லையே?

நானே எனக்குள் கேட்டுக் கொள்கிறேன் ……………………………………………………………..

எண்கள் போகும் பாதை ஒரு ஒற்றையடிப் பாதை. ஆனால் எழுத்தோ விரியும் தன்மை கொண்டிருக்கிறது . என்று ஒருவாறு பதில் சொல்லிக் கொள்கிறேன் . இன்று வளர்ந்து நிற்கும் விஞ்ஞானத்தில் எண்களின் பங்களிப்புதானே முக்கியமானது ? விஞ்ஞானமும் , இலக்கியமும் கை கோர்த்து நிற்கும் காலமொன்றில்தான் இன்று நிற்கிறோம்.விஞ்ஞானத்தின் துணை கொண்டு இலக்கியம் தன் சட்டகங்களை உடைத்து விடுதலை உணர்வெழுச்சியை நமக்குள் உருவாக்கி வெற்றிகண்ட ‘அவதார் ‘ போன்ற 3D திரைப் படங்கள் வந்திருக்கும் காலம்தானே இது …………………………………………….. /

இவ்வாறெல்லாம் எனக்குள் சில உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கையில் நான் எழுத்தின் அந்தரங்கத்தை தேடி நகர்கிறேன் . ஈழத்து இலக்கியம் ,தமிழ் நாட்டு இலக்கியம் , புலம்பெயர் இலக்கியம் ,கத்தரிக்காய் ,புடலங்காய் …இவற்றுக்குள் எங்கே நிற்கிறார் மு.பொன்னம்பலம்? எதற்குள்ளும் சிறைப்பட்டுவிடாமல் நகர்ந்துகொண்டிருக்கும் இந்த எழுத்துச் சித்தனின் பின்னாலேயே ஓடிச் செல்கிறேன் ….கொஞ்சம் நில்லுங்கள் நான் உங்களை எழுத முனைகிறேன் ………../
‘எனக்குள் ஓர் புதுக் குரல்
‘எழு ‘ என ஒலிக்கும்
மெல்ல விழிக்கிறேன்
இப்போ –
இடம் ,வலம்,குறிகள், சுழுமுனை ஈர்ப்பில்
புது வழி அழைக்கும்’
(சூத்திரர் வருகை)
02
நம்மை எப்போதுமே எவற்றாலாவது அள்ளி நிறைக்க விரும்புகிறோம் .
நமது பசிகளை பிடுங்கி எறியமுடியவில்லை . இன்னொரு புறம்
எவற்றுடனோ கலந்துவிடுவதற்கு தயாரானவர்களாக இருக்கிறோம். ‘நான் ‘ என்கின்ற மையம் தொடர்ந்து உடைக்கப் பட்டே தன்னை உருவகித்துக் கொள்கிறது. நாமோ திரும்பத் திரும்ப அள்ளி நிறைக்கிறோம்
சிதறடிக்கப் படுவதற்காக நம்மில் எவற்றை எல்லாமோ……………. சேர்த்துக் கொள்கிறோம்.

சேர்ப்பதும் சிதைப்பதுமான இந்த ‘முரண்அனுபவ நீட்சி’ எதற்காக?
விடுதலையை நோக்கி நகரும் மனிதமனதின் இயங்கு தளமே வாழ்க்கை .
அநீதி, நீதி என்ற கட்டுமானங்களை வைத்துக் கொண்டு மனித
மனது ஆடுகிறது . அதன் இலக்கு விடுதலையே/ மனத்தைக் கடக்கும்
விடுதலைஉணர்வு மனதினுள்ளேயே பதுங்கிக் கிடக்கிறது .
மனித மனது அநீதியை சார்ந்து இயங்கும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதாகவே எனக்குப் புலப்படுகிறது . ஆனால் விடுதலைக்கு
உகந்த கட்டுமானமாக அது நீதி வழியையே முன் வைக்கிறது.
அதன் அடுத்த கட்டமாக அது இந்தப் பிரபஞ்சத்தையே சத்தியப்
பேரியக்கமாகக் காண்கிறது…….

(தீமை எது ,நன்மை எது அப்படிஓர் இருமை இருக்கிறதா ?இல்லை இருப்பது ஒன்றுதான் . அந்த ஒன்றே இப்படி இரண்டாகி மாயம் புரிகிறது போலும்…… மு.பொ- முடிந்து போன தசையாடல் பற்றிய கதை )

மீண்டும் நான்தான் …. எனக்குள்ளேயே பேசிக் கொள்கிறேன் அவரைத்
தேடித் போகும்போதெல்லாம் அவரது எழுத்துக்கள் எனது அகம்
நோக்கியே திருப்பிவிடுகின்றன என் புலன்களை .
03
இலக்கியத்தின் இயங்குதளம் ‘அகம்’தான் புறத்தின் சேகரிப்புகள் அகத்தில் குழுமித்தான் எழுத்தில் விழுகின்றன .அகம் புறத்தில் கண்டதை தன்
செறிவுக்கேற்ப அளந்து பார்க்கிறது . மொழியின் திடலில் இறங்கி
அகவயமான அசைவொன்று நிகழ்கிறது. ஆயினும் அகவயமாக உணர்ந்த ஒன்றைப் பற்றிப் பேசுவதானால் அது புறவயமானதாகவே நிகழ்கிறது.
மிக மேலோட்டமான பார்வை கொண்டவர்களால் அகவய எழுத்துக்கள்
ஒதுக்கப் படுதலும் , எழுத்தாளர்கள் பயித்தியக் காரர்கள் ,அல்லது நரம்பு
மண்டல வியாதிக் காரர்கள் என்று கணிக்கப் படலும் நிகழ்ந்து விடுகிறது .
இவை இலக்கியத்துள் கணக்குச் செய்ய வரும் கோட்பாட்டுப் பற்றாளர்களின் வேலையே . இவர்களால் இலக்கியத்தின் சாத்தியமான எல்லைகளை ஒருபோதும் எட்ட முடிவதில்லை .ஈழத்து இலக்கியத்தை அறிய முயலும் ஒருவருக்கு மிக மேலால் தெரியக் கூடியது முற்போக்கு இலக்கியம் தோற்றுவித்த எழுத்துக்களே. ஈழவிடுதலை போராட்ட சூழலிலும் அதன் தாக்கத்தோடு வந்த எழுத்துக்களே பெருவாரியாய் வந்தன. பலர் தம்மிடம் இருந்த ‘அரசியல் ரசனையை’ இலக்கியத்துள் தேடினர் அல்லது அதற்குப் பெயரே இலக்கியம் என்றும் கண்டனர் . யாழ்ப்பாணத்து இடித்த அரிசி மாவு கனடியக் கடைகளில் வாங்குவது போல இன்று ஒரு கவிதை ஆகிப் போனது இந்தப் பாதைவழிப் பயணத்தின் பலன்தான் என்றும் கூற இடமுண்டு .

சொற்களிலிருந்து அர்த்தங்கள் களையப்படுவதிலும் சொற்களின்மேல் அர்த்தங்களின் சுமை ஏற்றி வைக்கப் படும் காலமிது. வடிவங்களில்
ஏற்படும் திருப்தியீனங்களால் ஏற்படும் பக்க விளைவு சொற்களுக்குள்
அர்த்தங்களை சொருகி வைக்கின்றது. கனதியாக சொற்களின்மேல் ஏறி அமர்ந்திருக்கும் பெரும்பாலான அர்த்தங்களின் காரணிகள் புறச் சூழல் இயக்கத்தின் ஒட்டுதல்களிலிருந்தே.

இலக்கியத்தை யாரை நோக்கி முன் வைக்கிறோம் ?
மொழி மற்றவர்களுடன் பேசுவதற்கு மட்டும்தானா ?அப்படியென்றால்
நம்மோடு நாம் எதனால் பேசிக் கொள்கிறோம்?நமது இரகசியங்களை
எந்த உறையில் போட்டு வைத்துள்ளோம் ?மொழி எப்போதுமே நமக்குள்
இறங்கி நிற்கிறது . அது நீந்திச் செல்வதற்கான சிறகுகளை மனம்தான் கொடுக்கிறது . மனசிடம்தான் பயணத்துக்கான உந்து சக்தி இருக்கிறது .
அப்படியானால் மனதுக்கும் மொழிக்கும் இடையிலான உறவில் எது எதனை மேவுகிறது ? எது எதனை மேவுகின்றதோ அதன் தன்மைக்கேற்ப வெளிப்பாடு நிகழ்கிறது . தொன்மத்திலிருந்து ஊறிய மனதின் படிவுகளிலிருந்து எழும் சமிக்ஞைகளை இறக்கிவைக்க மொழியின் கொள்ளளவு போதுமானதாக இல்லாத போதிலும் எழுதுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கிறது .
மனம் புறம் நோக்கி மட்டுமல்ல ..தனக்குள்ளும் பயணிக்கிறது .

மு.பொன்னம்பலத்தை பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் இவ்வாறெல்லாம் யோசிக்க வேண்டியிருப்பது கட்டாயமானது அதனாலேயே எழுதிச் செல்கிறேன்…………./
04
உள்ளுணர்வின் உந்துதலில் கண்டடையும் பவ்வியமான சொற்கள்- ஆதியும் ,அந்தமுமாய் நீண்ட சத்தியப்பேரியக்கத்தின் இயல்புத் துண்டுகளே. விஞ்ஞான,சமயஞான உள்ளுறைதலில் தோய்ந்து வெளிப்படும்கருத்தை காவிச்செல்லும் தனித்துவமான வாகனங்களாகவும் அவை இயங்குகின்றன.
பரிணாமத்தை அவாவும் இலக்கியக் கடத்தலில் இவ்வாறான சொற்களுக்கு மாற்றுச்சொற்களை இட்டு நிரப்பல் சாத்தியமானதில்லை. இவ்வாறான சொற்களை ஆராய அதே தளத்துக்கே செல்லவேண்டி இருக்கிறது .சொற்கள் பிறந்து நிற்கும் கருத்தியற்தளம் பற்றிய புரிதலை உள்வாங்கவேண்டி இருக்கிறது .

தமிழ் இலக்கியப் பரப்பில் மு .பொ வைப் பற்றிப் பேச முனைகையில்
மு .தளையசிங்கத்தைத் தொடுவது தவிர்க்க முடியாதது. தளையசிங்கம்
தமிழ் இலக்கியப்பரப்பில் பிரமிக்கத்தக்க ‘பேரியக்க சக்தியாக ‘ நின்றவர் என்பது பலரும் அறிந்ததே . அவரது தொடர்ச்சியாக மு .பொன்னம்பலத்தை காண்பவர்களும் உண்டு . ஆயினும் அவரிடமிருந்து வித்தியாசப் பட்டவராகவே மு .பொன்னம்பலம் தொடர்ந்து செல்கிறார் .

ஒரு கோட்பாட்டாளனின் அச்சொட்டான சொற்களுக்கும் ,ஒரு கவிஞனின்
‘மெய்ப்பித்தேறிய’ சொற்களுக்கும் இடையிலான வித்தியாசங்களின் புரிதலோடு மு .பொவின் சொற்களை அணுகுதல் வேண்டும் என்றே
கருதுகிறேன் . எழுத்துள் பல முயல்வுகளைசெய்த மு.பொவின் அந்தரங்கத்தில் செறிந்து நிற்பது அவரது கவித்துவஆழுமை என்றே
புலப்படுகிறது . கவித்துவம் தத்துவத்தை கதையாடுகிறது . மையத்தில்
நிற்பது நீதித் தேடலின் பசியே . ஆனால் தளையசிங்கத்தின் கவித்துவம் என்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.அவர் ஒரு தத்துவவாதி .

நீதிக்கும் ,விடுதலைக்குமான சமன்பாடுகளை மு.பொ எழுத்தில் செய்து பார்க்கிறார் .பல தளத்தில் விடுதலையை நோக்கிய இயக்கமாக அவரது
எழுத்துகள் முன்வைக்கப் படுகின்றன . அவரது சத்திய தரிசன நிலையில்
கருக் கட்டும் சொற்களால் அவரது இலக்கியம் நிகழ்கிறது . அந்நிலையை
‘கருத்து நிலைகளின்மீது ஏறி நிற்கும் கூடிய கணிப்பின் பயன் ‘ என்றும்
ஒருவாறு சொல்லிக் கொள்ளலாம் . ஆனால் என்னிடம் இருப்பதோ
இலக்கியத்தின் இயங்குதளத்தில் ஏற்பட்டிருக்கும் முன் அனுமானம் மட்டுமே. எனக்கு சாத்தியமான கருவியைக் கொண்டே மு .பொன்னம்பலத்தை நாடுகிறேன் .
05
விசாரத்தின் பல பக்கங்களில் விஞ்ஞானிகள் ,உளவியலாளர்களின்
கருதுகோள்களை வைத்துக் கொண்டு நகர்ந்திருக்கும் கதைகளில்
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் நெகிழ்ச்சியே விஞ்சி நிற்கிறது .
இங்கே ஒரு தத்துவ ஆசிரியனின் செயற்பாடே அதிக இயக்கம் கொள்கிறதாகத் தெரிகிறது .இலக்கியம் உருவாக்கும் உணர்வெழுச்சியை
இங்கு காண்பது கணிசமாகவே இருக்கிறது .இலக்கியம் ,தத்துவம் இரண்டுக்குமான கூட்டு சக்திப் பரிமாற்றத்தை இங்கு நான் காணவில்லை என்றே சொல்வேன் .

அவரது ‘முடிந்து போன தசையாடல் பற்றிய கதை’ என்ற கதைத் தொகுப்பினை விடுதலையின் வெவ்வேறு தளங்களின் பார்வை விரிப்பாக
முன் வைத்தவர் ‘சுய தியாகத்திற்கு ஆற்றல் பெற்றிருக்கும் ‘ஒரு தேசிய
இனத்தைக் காண்பதோடு தேசிய இன விடுதலைக்கான உறுதிப் படுத்தலாகவும் ‘தியாகத்தைக் ‘ காண்கிறார் … அத்தோடு அத்தகைய இனத்துக்குள் ‘கொலையே மருந்து ‘ என்ற நிலை தோன்றிவந்ததையும்
பதிவு செய்கிறார் …
‘அது ,நோயில் இருத்தல் , விசாரம் ,கடலும் கரையும் ,ஆண்நிலை இயல்பு பற்றிய ஆழமான பார்வை ,திறனாய்வு சார்ந்த பார்வைகள்,பொறியில் அகப்பட்ட தேசம் ,மு..தளையசிங்கம் ஒரு அறிமுகம் ,முற்றத்துப் பூக்கள்’
போன்ற பல முக்கிய வெளிப் பாடுகள் அவரிடமிருந்து வந்திருக்கின்றன .என்னுடைய பார்வையில் அவருடைய ‘சூத்திரர் வருகை ‘என்ற கவிதைத் தொகுப்பு ஈழத்து கவிதைபண்புகளில் வித்தியாசமான முனைப்புகளைக் கொண்டதாகவே தெரிகிறது .

காலம் கருத்தரிக்கும் மூலத்தை
ஆயும் ஒவ்வோர் சமயமும்
பாழில் விழும் நான் .
வீழ்ந்தது தெரியாது
எழுகையில்
என்மகள் முற்றத்தில் நின்று
கைசுழற்றிக் கயிறடிப்பில்
காலம் கயிறாய் துடிக்கிறது
அண்ணார்ந்து பார்த்தேன்
நூலிழுத்து கீழிறங்கும் காலத்தில்
ஊஞ்சலிடும் சிலந்தி .

கண் காணா
கால முகட்டில் முடிச்சிட்டு
ஏணையென ஆடும் பிரபஞ்சம் .
ஒவ்வோர் யதார்த்த நிகழ்வுள்ளும்
காலமே ஆயிரமாய் வலை பின்னும் –

மின்னிழையில் இரத்தோட்டம்
துயில்கையில் காலத்தை விழுங்கி
விழிக்கையில் காலத்தை வெளித் தள்ளும் நான் .

விழிப்பில்லை,
துயிலில்லை
காலக் கருத்தரிப்பின் மூலத்தில் ஆழ்கையில்
பாழில் விழும் நான் .

மு.பொ வின் எழுத்துக்களில் கட்டமைக்கப் படும் கருத்துகளிலும் பார்க்க
வெளிகளையே அதிகம் காண்கிறேன் .. அவரது கவிதைகள் ,கதைகள் பலவற்றுக்குள் வாசகர்கள் நின்று சுய பரிசீலனை ஒன்றைச் செய்வதற்கான இடங்கள் பலவற்றை அவர் விட்டுச் செல்கிறார் . அவரது கதைகளின் இடைவெளிகளுள் நாம் எழுதக் கூடிய கதைகளும் நமக்காகக் காத்துக் கிடக்கின்றன, அவரது இலக்கியப் பேச்சிலும் இலக்கியத்துள் நிகழும் மெளனம் கனமானதாகவே பலசந்தர்ப்பங்களில் உணரவேண்டி இருக்கிறது. இலக்கியத்துள் நிகழும் மெளனம் இல்லாமையின் மெளனம் இல்லை. அது பேரிருப்பின் மெளனமாக பொதிந்திருக்கிறது.பேரிருப்பின் மெளனமே பெரும் பேச்சு.செயல்கள் அபத்தத்தில் முடியும் தருணங்களை நமக்குள் உணர்த்திக் கொண்டிருப்பதும் இந்தப் பேரிருப்பே . பேரிருப்பை உணர்ந்தவர்களுக்கு எழுத்து ஒரு ‘எட்டுக்கால் பூச்சி ‘

விடுதலையை நோக்கி நகரும் இந்த மனநிலை எந்த இலக்கியத் தளத்தில்
நின்று பேசுகிறதோ அந்தத் தளத்தையே உடைத்துக் கொண்டு போகுமளவுக்கு
உத்வேகம் கொள்கிறது .. இதனை தளையசிங்கம் விரிவாகவே சொல்லியிருக்கிறார். ‘ ‘மாற்றமற்ற நிரந்தரமான ஒன்றாகவும்’ அது தேக்கமற்றதாகவும் அவரால் காணப்படுகிறது. தேக்கமற்ற அத்தளத்தில்
நின்று வைக்கப்படும் சத்தியக் கருத்துநிலை உயர்வானதே. நம்மிடம் இருக்கும் தத்துவங்கள் காலத்துக்குக் காலம் புதிய பிரச்சினைகளால் உடைக்கப்பட்டே வந்திருக்கின்றன . தோன்றிய புதுப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளையும் முன்வைக்கும் முகமான தத்துவ உருவாக்கங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மெய்முதல் வாதமென்பது தேக்கமற்ற
பயணத்திற்கான பரப்பாகவே நம்முன் வைக்கப் பட்டிருக்கிறது . ஒரு தளைய சிங்கத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு இன்னொரு தளைய சிங்கமோ , தளைய சிங்கத்தைத் தாண்டிய ஒருவரோ தேவையிலை. இனிவரும் தலை முறைக்கும் தளையசிங்கமே அக ஆற்றலையும், விரிவையும் கொடுக்க
வல்லவராக இருக்கிறார் . புரிந்து கொள்ளத் தெம்பில்லாதவர்கழுக்கு
‘மெய் முதல் வாதம் தோத்துப்போன தத்துவம்’ என்று சொல்வதற்கு என்ன
அருகதை இருக்கிறது ?

இதோ ஹெமிங்வேயின் கிழவனை இழுத்துச் சென்ற மீன் கரையில்
எலும்பாய் கிடக்கிறது …………. இப்படித்தான் அகத்தில் காணும் தரிசனங்களை கரைக்குக் கொண்டுவரல் கடினமாகிப் போகிறது இதோ …. இந்தக் கட்டுரையை உடையுங்கள் ,நொறுக்குங்கள் உங்கள் செயல்கள் நிறைவேறிற்று என்று தெரிந்தால் ..உற்றுப் பாருங்கள் எஞ்சி நிற்பது தளையசிங்கத்தின் சத்தியதரிசனம் மட்டுமே .

மு. பொன்னம்பலத்தை நன்றியோடு வாழ்த்தி நிற்கிறேன் /
……………………………………………………………………………………………………………..
மெலிஞ்சிமுத்தன்


Popular Articles